Tuesday, August 8, 2017

சக்தி கொடு! - 2 , சிவராம் ஜெகதீசன்


ஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும் 

********************************
வைட்டமின்கள் & மினரல்கள் என்றால் என்ன?
வைட்டமின், மினரல், ஃபைட்டோ கெமிகல்ஸ், ஆண்ட்டி ஆக்சிடண்ட்ஸ் - இவையெல்லாம் என்ன?
வைட்டமின்கள் என்பவை இயற்கை மூலக்கூறுகள். இவற்றை நம் உடல் தானே தயாரிக்காது. அல்லது மிகுந்த சிரமப்பட்டு ஏதோ கொஞ்சம் தயாரிக்கலாம். சூரிய ஒளியில் இருந்து டி வைட்டமின் தயாரித்துக்கொள்வது போல. ஆனால் வைட்டமின்கள் நமக்கு மிகவும் அவசியம். எனவே, நாம் உண்ணும் உணவிலிருந்துதான் பெரும்பாலான வைட்டமின்கள் உடலுக்குக் கிடைக்கவேண்டும்.
நாம எதைச் சாப்பிடுகிறோம்? தாவரங்கள், மற்றும் இறைச்சிகள். மனிதர்களுக்கிஉ இரையாகும் விலம்க்குகளும் தாவரத்தை உண்பவை தான். அதனால், பொதுவாகத் தாவரங்கள்தாம் இந்த வைட்டமின்கள் கிடைப்பதற்கு ஒரே வழி. அந்தத் தாவரங்கள் எப்படி இந்த வைட்டமின்களைப் பெறுகின்றன? என்றால், மண்ணிலிருந்து.
அதாவது இயற்கையாக மண்ணில் விளைகிறது தாவரம்; அதை உண்ணும் விலங்குகளுக்கு இந்த வைட்டமின்களும் மினரல்களும் கிடைகின்றன. மண்ணிலிருந்து சத்துகளை உறிஞ்சி அதைத் தேவைக்கேற்ப மாற்றி தாவரங்கள் அவற்றைத் தன்னகத்தே வைத்திருக்கும். இதை உண்பதன் மூலம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தேவையான வைட்டமின்களும் மினரல்களும் கிடைக்கின்றன. மலையில் இருந்தும் மழையில் இருந்தும் ஆறு கிளம்பி, அதை அணைகள் தேக்கி, பைப்புகள் வழியே மெட்ரோ வாட்டர் நம் வீட்டுக்கு அனுப்புகிறதல்லவா? அந்த மாதிரி.
பிரச்னை என்னவென்றால், இப்படித் தொடர்ச்சியாக விளைவிக்கப்பட்ட நிலங்கள் அதன் சத்துகளைக் கிட்டத்தட்ட இன்று இழந்தே விட்டது. இந்த நிலங்களில் போடப்படும் உரங்கள் பயிர்களை அதிகமாக வளர்க்க உதவி செய்தாலும், தேவையான அல்லது ஒரு நூற்றாண்டுக்கு முன் இருந்ததைப் போல சத்தான நிலங்கள் இப்போது நம்மிடம் இல்லை. மண்ணிலிருக்கும் நுண்ணுயிரிகளை உரங்கள் பெரும்பாலும் அழித்து விட்டன. உலகில் மிகச் சில விவசாய நிலங்களைத் தவிர பெரும்பாலான விவசாய நிலங்களின் நிலை இதுதான். மேலும் தற்போதைய ஆராய்ச்சிகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளும் உணவுப் பழக்கத்துக்கு வந்து விட்டன. இப்போதே தேவையான நோய்களை வைத்திருக்கிறோம். இன்னும் இந்த நிலை மோசமாக ஆகும்போது நோய்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.
இன்னொரு பிரச்னையும் உள்ளது. இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் உணவுகளையும் பதப்படுத்துதல் என்ற பெயரில் ருசிக்காகவும், அதிக நாட்கள் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களின் அலமாரிகளில் கெடாமல் இருக்கச் செய்வதற்காக இன்னும் அவற்றின் சத்துகள் முற்றிலுமாக உறிஞ்சப்பட்டு, வேறு செயற்கையான ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு, அழகாக பேக் செய்து விற்கப் படுகிறது.
அதனால்தான் பேலியோவில் இயற்கையாகக் கிடைப்பதை மட்டும் (சிறிது சத்துக் குறைபாட்டுடன் இருந்தாலும்) வீட்டில் சமைத்து உண்ணச் சொல்கிறோம். பொரிப்பதையும், ரெடிமேட் உணவுகளையும் வேண்டாம் என்று சொல்கிறோம்.
நாம் உண்ணும் உணவிலிருந்து தேவையான சத்துகளைக் கிரகிக்க முடியாமல் உடல் திணறுகிறது. இன்னும் உணவு வேண்டும் வேண்டும் என்று கேட்கிறது. எதிலிருந்தாவது உடல் தனக்குத் தேவையான சத்துகள் கிடைக்காதா என்று தேடுகிறது. இந்த சத்துகள் உடலுக்கு வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
உணவுகளில் ஏற்பட்ட இந்த உயிர்ச்சத்துகள் பற்றாக் குறையின் காரணமாக மருத்துவ அறிவியல் எந்தக் குறிப்பிட்ட சத்து உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது என்று கண்டு பிடித்து அவற்றை கெமிக்கல்கள் மூலம் கட்டமைத்து, இயற்கையைப் போலவே தோற்றமளிக்கும் செயற்கைப் பிரதிகளை உருவாக்க ஆரம்பித்தது.
தற்போது கடைகளில் கிடைக்கும் காய்கறிகள், லட்சக்கணக்கான ஆண்டுகளாக உண்ணப்பட்டு வந்த காய்கறிளின் வடிவங்களே அல்ல. மலடாகிப் போன மண்ணிலிருந்து விளைவிக்கப்படும் காய்கறிகளில் உடலுக்குத் தேவையான சத்துகள் முழுமையாகக் கிடைக்காது. இதன் காரணமாகத்தான் பல வகையான ஆட்டோ இம்யூன் நோய்களும், மெடபாலிக் சிண்ட்ரோம் என்று சொல்லப்படும் வளர்சிதை மாற்ற நோய்களும், உடல் பருமனும் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை நோய்களும் நமக்கு வருகின்றன.
ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கை வைட்டமின்களை மல்ட்டி வைட்டமின்கள் என்ற பெயரிலும், உணவிலேயே சேர்த்தும் (வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட எண்ணெய், பால், வைட்டமின்களும் மினரல்களும் உள்ள குளிர் பானங்கள் போன்றவை இந்தப் பிரிவில் வருபவை) நம்மிடம் விற்க ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட அனைத்து வகையான மல்ட்டி வைட்டமின்களும் சிந்தெடிக் என்று சொல்லப்படும் செயற்கை வைட்டமின்களே. அதற்காக இந்த செயற்கை வைட்டமின்கள் முழுக்க முழுக்கப் பயனற்றவை என்று சொல்லி விடவும் முடியாது. இந்த செயற்கை வைட்டமின்களைத் தயாரிப்பது சுலபம், விலையும் மலிவு. அதிக நாட்கள் பாட்டிலில் வைத்தாலும் அதன் தன்மை மாறாது, அதாவது கெட்டுப் போகாது. பெரிய அளவான டோசேஜ்களை சின்ன மாத்திரைக்குள் அடக்கி விட முடியும். இந்த செயற்கை வைட்டமின்களையும் "இயற்கை" என்றே சொல்லி விற்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.
ஏனெனில் இந்த செயற்கை வைட்டமின்களின் மூலக்கூறுகளும் இயற்கை வைட்டமினின் மூலக்கூறுகளும் ஒன்றே. ஆனால் இயற்கையில் - உணவில் கிடைக்கும் வைட்டமின்களுக்கும் செயற்கைக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு, செயற்கை என்பது தனியாகக் குறிப்பிட்ட வைட்டமினை மட்டுமே கொண்டிருக்கும். இயற்கையில் கிடைக்கும் என்சைம்களும், கோ ஃபேக்டர்களும் செயற்கையில் கிடைக்காது. இந்த கோ ஃபேக்டர்கள் தான் உடலால் இந்த சத்துகள் கிரகிக்கப்படுவதற்கு மிக மிக மிக முக்கியமானது.
இந்த செயற்கை வைட்டமின்கள் தயாரிக்கப்படும் முறைக்கும் இயற்கையாக தாவரங்களோ அல்லது விலங்குகளோ, வளர்சிதை மாற்றத்தினால் தயாரிக்கும் முறைக்கும் அளவு கடந்த வேறுபாடு உள்ளது.
ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கை வைட்டமின்கள், உடலால் கிரகிக்கப்படும் அளவு மிக மிகக் குறைவு. உடல் எதிர்பார்ப்பது இந்த செயற்கை வைட்டமினை அல்ல. பெரும்பாலாலான நேரத்தில் உடலுக்கு இந்த செயற்கை வைட்டமினை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாது விழிக்கும் அல்லது கழிவு என்று வெளியே தள்ளி விடும்.
அதனால், மெகா டோஸ்களில் வைட்டமின்களையும் மினரல்களையும் எடுத்தால் எல்லா வியாதியும் சரியாகிவிடும் என்று நினைக்க வேண்டாம். இதற்கான டோசேஜை மருத்துவரிடம் ஆலோசித்து எடுப்பதே பாதுகாப்பானதாகும்.
உண்ணப்படும் உணவிலிருந்தோ அல்லது எடுக்கும் சப்ளிமெண்டுகளில் இருந்தோ, ஒரு வைட்டமின் எந்த அளவு உடலால் கிரகிக்கப்படுகிறது, உபயோகமாகிறது என்பது முக்கியம்.
இதை பயோஅவைலபிலிடி என்று சொல்வார்கள்.

No comments: